17 ஆம் ஆண்டு நினைவில்…

17 ஆம் ஆண்டு நினைவில்…

திருமிகு ச.முனியப்பன்

தோற்றம்: 07/03/1931  மறைவு: 19/11/2005

            இன்று (19/11/2022) அப்பாவின் நினைவு நாள். அவர் மறைந்து 17 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அம்மாவும் மறைந்து விரைவில் ஓராண்டு ஆகப்போகிறது. அப்பாவின் இந்த நினைவுநாளில் அம்மாவும் இல்லை.

       எனது தந்தையார் திரு ச.முனியப்பன் (1931-2005) இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியராக பணியாற்றியவர். வ.உ.சி. அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியைத் தொடங்கி (1952) அப்பகுதி மக்களுக்கு கல்வி கிடைக்கக் காரணமாக இருந்தவர்.

     பெரிய படிப்பெல்லாம் தேவையில்லை; பிள்ளைகளைச் சொந்தக்காலில் நிற்க வழிவகை செய்தால் போதும் என்கிற கருத்தைக் கொண்டிருந்தார். அதனடிப்படையில் அவரது செயல்பாடுகள் அமைந்தன. அவரது கருத்தியல் சார்புகள் குறித்தும் நினைத்துப் பார்க்கிறேன்.

        அவருக்குக் கடவுள் நம்பிக்கைகள் கிடையாது. பழனி முருகன், தஞ்சைப் பெரியகோயில், கூவாகம் கூத்தாண்டவர் கோயில் போன்று எப்போதாவது கோயிலுக்குச் செல்வார்; அது வழிபாட்டிற்காக அல்ல. வீட்டில் பெரியார், அண்ணா, பாரதியார், காமராஜர் படங்களைப் பெரிதாக மாட்டி வைத்திருந்தார்.

         ‘தினமணி’ நாளிதழ் வந்துகொண்டிருந்த காலத்திலும் ‘சுதேசமித்திரன்’ நாளிதழைத்தான் நாள்தோறும் வாங்கினார். அந்த இதழ் நின்றுபோன பிறகு ‘அலை ஓசை’ எனும் நாளிதழுக்கு மாறினார். அதுவும் நின்றது. பிறகுதான் ஏ.என். சிவராமன் ஆசிரியர் பொறுப்பிலிருந்த ‘தினமணி’யை வேறு வழியின்றி வாசிக்கத் தொடங்கினார்.

       எங்கள் இல்லத் திருமண விழாக்களுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு. பி.வி. ராஜேந்திரனை அழைப்பார். இருப்பினும் அவரை காங்கிரஸ் சார்பாளராக வகைப்படுத்த முடியாது. இந்திராகாந்தி, ராஜூவ் காந்தி போன்ற காங்கிரஸ் பிரதமர்களைக் கடுமையாக விமர்சித்துப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.

      திராவிட இயக்கச் சார்பு இருந்தது என்றாலும் பெரியார், அண்ணா ஆகிய இருவரைத் தவிர்த்து வேறு எவரையும் அவர் கொண்டாடியதில்லை. அவர்களைப் பற்றிய கடும் விமர்சனங்கள் வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

         தங்க நகைகளை முற்றிலும் வெறுத்த அவர் பணி ஓய்வுக்குப் பிறகு அணிந்துகொண்டார். கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் சோதிடம் குறித்த நேர்மறையான கருத்தும் இருந்தது. அதுகுறித்து சோதிடர்களிடம் விவாதங்கள் செய்வதை வழக்கமாகக் கொண்டுருந்தார்.

     பல கருத்துநிலைகளின் கலவையான பிரதிநிதியாக அவரை நினைத்துப் பார்க்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *